ETV Bharat / bharat

உ.பி.,யில் அகற்றப்பட்ட மசூதி ஒலிபெருக்கி; இந்து அமைப்பின் எதிர்ப்பு எதிரொலி!

author img

By

Published : Apr 17, 2022, 1:04 PM IST

Updated : Apr 17, 2022, 1:27 PM IST

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப் பிரதேச மசூதி ஒன்றில் நேற்று பாங்கு ஒலித்ததற்கு இந்து அமைப்புகள் மூலம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த மசூதி நிர்வாகம் அங்கிருக்கும் ஒலி பெருக்கியை அகற்றியுள்ளது. தற்போது, இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

இந்து அமைப்பின் எதிர்ப்பு எதிரொலி
இந்து அமைப்பின் எதிர்ப்பு எதிரொலி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம் கோவர்தன் நகரில் உள்ள மசூதியில் நேற்று (ஏப். 16) புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியது. அங்கு ஒரு நாளில் ஐந்து முறை பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) ஒலிப்பது வழக்கம். இந்நிலையில், ஹனுமன் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு அங்கு பாங்கு ஒலிப்பதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், பாங்கு ஒலித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று காலையில் மசூதி பகுதியில் திரண்டு ஹனுமன் துதி பாடி கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, மேலும் அங்கு வகுப்புவாத கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அன்வர் ஹூசைனின் வழிக்காட்டுதலின் பேரில், மசூதியின் ஒலிபெருக்கி அகற்றப்பட்டது.

அசாதாரண சூழல்: இதுகுறித்து, அன்வர் ஹூசைன் கூறியதாவது," நேற்றிரவே (அதாவது நேற்று முன்தினம் ஏப். 15) காவல் துறையினர், இங்கு வந்து ஒலிபெருக்கியை அணைத்துவைக்கும்படி அறிவுறுத்தினர்.

காலையில், சில அமைப்புகள் மசூதி முன் கூடி, கோஷங்களை எழுப்பினர். அங்கு அசாதாரண சூழல் உருவாவதை உணர்ந்து நாங்கள் மசூதியில் இருந்த ஒலிபெருக்கியை அகற்றிவிட்டோம். மசூதியில் ஒலிபெருக்கியை வைக்க மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி வாங்கியுள்ளோம். மத நல்லிணக்கத்திற்கு உறுவிளைவிக்கும் எண்ணம் எங்களுக்கில்லை" என்றார்.

'அங்கு இஸ்லாமியர்களே இல்லை': ஒலிபெருக்கி அகற்றப்பட்ட பின்னர், ஹிந்து வாஹினி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஷ்யாம் சுந்தர் உபாத்யா தெரிவிக்கையில், "இங்கு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள், இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இப்பகுதியில் இல்லை. ஆனால், இந்துக்களை எரிச்சலூட்டும் விதமாக இவர்கள் தினமும் ஐந்து முறை பாங்கை ஒலிக்க விடுகின்றனர்.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விழா நடத்த உள்ளோம். நாங்கள் மசூதி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒலிபெருக்கியை ஒலிக்கவிட மாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அவர்கள் வாக்குப்படி நடந்துக்கொண்டால், நாங்களும் ஒத்துழைப்பு அளிப்போம். இல்லையெனில், இந்த இடத்தில் எங்களின் நிகழ்ச்சி நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்" என்றார். இந்து அமைப்பின் எதிர்ப்பை அடுத்து, மசூதியில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு!

Last Updated :Apr 17, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.